கருணா வெளிப்படுத்தும் துரோகிகள் பட்டியல்

புளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள், இவர்களை நாங்கள் துரத்தி துரத்தி சுட்டோம் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே தற்பொழுது இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளனர்.

புளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள், இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம், என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காப்பாற்றி நல்லதொரு நிலைக்கு கொண்டு வருவதற்கே நான் போராடினேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று தான் முயற்சி செய்ததாகவும், ஆனால் தன் மீது பழி சுமத்தவே 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானும் விலகி வந்ததாகவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.