மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணியின் தலைவர் சந்திமல் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஓர் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடத் தடை விதித்தது பன்னாட்டு கிரிக்கெட் சபை.
இந்த ஆட்டம் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்றது. ஆட்டத்தின் இரண்டாம் நாளில் இலங்கை வீரர்கள் பந்தைத் திட்டமிட்டுச் சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. ஆனால் இலங்கை அணியின் வீரர்களோ அல்லது இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரிகளோ இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிலும் தம்மீது பொய் குற்றச் சாட்டு சுமத்தப்படுவதாகத் தெரிவித்து ஆட்டத்தின் மூன்றாம் நாளின்போது சுமார் இரண்டு மணிநேரம் களத்தடுப்பைப் புறக்கணித்தனர் இலங்கை அணியின் வீரர்கள். இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பின்னர் சந்திமலிடம் நடத்திய விசாரணையின் போது அவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
‘முதலில் தன் மீதான குற்றச்சாட்டை சந்திமல் நிராகரித்தார். பின்னர் சந்திமல் பந்தைச் சேதப்படுத்தும் காணொலியைக் காட்டியதும் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்’’ என்று ஐ.சி.சி. குறிப்பிட் டுள்ளது.
ஆனால், ஆரம்பத்தில் தங்களின் அணி வீரர்கள் எந்தவிதமான தவறிலும் ஈடுபடமாட்டார்கள் என்று வீராப்புப் பேசிய இலங்கை அணி நிர்வாகம் தற்போது, வேறுமாதிரியாகப் பேசுகிறது. அதாவது ‘‘ஆட்டம் தொடங்கும் 10 நிமிடங்களுக்கு முன் வந்து பந்தை சேதப்படுத்திவிட்டதாக நடுவர்கள் எங்களிடம் முறைப்பாடு தெரிவித்தனர். இதை ஏற்க முடியாது’’ எனத் தெரிவித்தனர்.
ஆனால், இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து எந்தவிதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய சந்திமலுக்கு 48 மணிநேரம் அவ காசம் இருக்கிறது. ஆனால், குற்றச்சாட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், சந்திமல், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோர் மீது இலங்கை கிரிக்கெட் சபை கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இலங்கையின் கிரிக்கெட் மதிப்பை, மாண்பை கெடுக்கும் வகையில் செயற்பட்ட சந்திமல் ஜூலை மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் நீக் கப்படலாம், ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்க ஆலோசித்து வரப்படுவதாகச் செய்திகள் வந்துள்ளன.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் சிமித், முன்னாள் உபதலைவர் வோர்ணர் இருவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்தைத் திட்டமிட்டுச் சேதப்படுத்தியமைக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலா ஒவ்வொரு வருடம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது. (ம)