இன்று அதிகாலையே வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து (படங்கள்)

பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லைப் பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. பம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, பாலத்தின் மீது செல்லாமல் பாலத்துக்கு அருகில் இருந்த நீர் குழாய் மீது சென்று மறுமுனையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வேகமாக வந்த கார், பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி மற்றும் மின்கம்பம் ஆகியவற்றை உடைத்துக்கொண்டு ஆற்றுக்கு குறுக்காக செல்லும் சிறிய நீர்குழாய் மீது சென்று மறுமுனையில் இருந்த மின்கம்பம் மற்றும் விளம்பர பலகையில் மோதியுள்ளது.

இதில் மின்கம்பம் உடைந்துள்ளதோடு விளம்பர பலகையும் சேதமடைந்துள்ளது. இதன்போது கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகமல் மறுமுனைக்கு சென்றுள்ளமை பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

பென்ஸ் ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தால் கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.