சிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்!

சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்று 12.00 மணியளவில் றெஜினாவின் உள் பெனியன், தலைமுடிக்கு போடும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளது. கிராம இளைஞர்கள் இன்று காலை 10.30 மணிதொடக்கம் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே மேற்படிப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இப்பொருட்களை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

எனினும், சிறுமியின் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை.

இதேவேளை, கடந்த 25ஆம் திகதி மாலை கிணறு ஒன்றில் இருந்து சிறுமி றெஜினாவின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.