மகளின் மானத்தை காப்பாற்றிய தந்தைக்கு நேர்ந்த கொடுமை…

அனுராதபுரம், தீபான வித்தியாலயத்திற்கு முன்பு வைத்து ஆயுத குழுவொன்றினால் நபர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரை கொலை செய்யப்பட்ட தந்தை தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், வன்னியன்குளம் பிரதேசததை சேர்ந்த 45 வயதான சுஜீவ பிரசந்த குமார ஹெட்டிஆராச்சி என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமண வைபவத்தில் வைத்து சுஜீவவின் மகன்கள் மற்றும் அந்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தடுக்க சுஜீவவின் மகள் தலையிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மோதலில் ஈடுபட்ட நபர், சுஜீவவின் மகளை நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதன் போது சுஜீவ அந்த நபரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சுஜீவ வாகனத்தை பழுது பார்ப்பதற்காக பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அந்த மோட்டார் வாகனம் செயலிழந்துள்ளதாக கூறி நபர் ஒருவர் வாகனத்தை தீபானி பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.

அந்த இடத்தை வாகனம் சென்றடைந்தவுடன் ஆயுதத்துடன் மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவரே தந்தையை கொலை செய்திருக்கலாம் என உயிரிழந்தவரின் மகள் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.