பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த மூங்கில்!!

நோட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின், எடிட் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோட்டன் பகுதியிலிருந்து பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மீது எடிட் பிரதேசத்தில் வைத்து மூங்கில்கள் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூங்கிளொன்று பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பேருந்திற்குள் நுழைந்ததாலேயே இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலத்த காற்று வீசியதாலேயே பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில்கள் உடைந்து பேருந்து மீது விழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.