நோர்வூட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியிலிருந்து பெண்ணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மரண விசாரணைகளின் பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.