இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு : மாதந்தோறும் விலைத்திருத்தம்!

எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லிட்டர் டீசலின் விலையை 9 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லிட்டரை 10 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலையை 08 ரூபாவாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை 07 ரூபாவாலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, மாதந்தோறும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.