தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!!

ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.

சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இதுதொடர்பாக ராஜேஷ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.

ஆனால், உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிஸார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனது தாயின் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.

அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீற்றர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.சிலர் இந்த காட்சிகளை கைத்தொலைபேசியில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.