இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா பறிமுதல்..

இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழக காவல்துறையின் கியூ பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மண்டபம் கடற்கரையோரத்தில் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 150 பொதிகளில் அடைத்து கடற்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுதவிர இந்த கஞ்சா தொகையை தீவு நாடொன்றிற்கு கடத்திச் செல்வதற்காக படகு வரும்வரை காத்திருப்பதாக சந்தேகநபர்கள் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.