பிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 04

தமிழீழ விடுதலையை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முப்பது வரையான இயக்கங்களின் தலைவர்களில் மிக அறிவார்ந்தவர்களில் பாலகுமாரனும் ஒருவர். உலக அரசியல், இடதுசாரித்துவ கொள்கை, அரசியல் விஞ்ஞானம் என அறிவுபூர்வ உரையாடல்களிற்கு பாலகுமாரன் பொருத்தமானவர். ஆனால் ஒரு தலைவராக பாலகுமாரன் சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த ஆளணி, ஆயுத தளபாட வசதிகளிற்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறைவானது. பாலகுமாரன் தீவிரமாக ஆயுதவழி முறையை தலைமைதாங்க பொருத்தமானவரும் இல்லை. ஆளணியில் சிறிய இயக்கங்கள் எல்லாம் பெயர் சொல்லும்விதமாக ஏதாவதொரு தாக்குதலை நடத்தியிருந்தபோதும், ஈரோஸின் வரலாற்றில் அது மிஸ்ஸிங். ஈரோஸ் இயக்கத்தினர் நல்ல கருத்தியல்வாதிகளாக இருந்தார்கள். ஆனால் செயற்பாட்டாளர்களாக இருக்கவில்லை.

ஈரோஸ் அவ்வளவாக இராணுவ சிந்தனையுடன் இயங்காதது, புலிகளுடன் நெருக்கத்தை பேணியது போன்ற காரணங்களால், 1985 இல் புலிகள் மற்ற இயக்கங்களை தடை செய்தபோது ஈரோஸ் தப்பிப்பிழைக்க வழிசமைத்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற என்பன இந்திய இராணுவத்தின் பின்னணியில் இயங்கின. புளொட் இலங்கை இராணுவத்தின் ஆதரவில் இயங்கியது. ஈரோஸ் யாருடைய ஆதரவில் இயங்கியது என்பதை அறுதியிட முடியாமல், “ஈரோஸ்தனத்துடன்“ இயங்கியது!

இது ஈரோஸ்காரர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. அப்பொழுது இருந்த சூழலில் ஒரு நுணுக்கமான இராஜதந்திர அணுகுமுறையை அவர்கள் கையாண்டார்கள் என்றும் சொல்லலாம். ஏனெனில், இன்று திரும்பி பார்க்க எல்லாமே அழிவில்தான் முடிந்துள்ளன. அந்த நெருக்கடிக்குள் ஈரோஸ் போராளிகளை அதன் தலைமை காப்பாற்றியிருக்கிறது.

இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சமயத்தில்தான் இயக்கங்களிற்கு சிக்கல் உருவானது. இயக்கங்களின் முன்னால் மூன்று தேர்வு இருந்தது. ஒன்று அரசுடன் இணைவது அல்லது இந்தியாவிற்கு செல்வது. இரண்டு புலிகளுடன் இணைவது. மூன்றாவது தனித்து இயங்குவது.

தனித்து இயங்கும் வல்லமை புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களிற்கு இருக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் முன்னரே புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்களின் ஆளணியை புலிகள் கணிசமாக அழித்துவிட்டார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் நடந்த இந்த சகோதரப் படுகொலையை பின்னணியில் நின்று இந்தியாதான் நடத்தி முடித்தது. இயக்கங்கள் நிதானமாக, விழிப்பாக நடந்து இந்த சிக்கலை கடந்து ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் ஈழப்போராட்டம் வேறு முடிவுகளை எட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்காதது உண்மையில் துரதிஸ்டமே.

இந்திய இராணுவம் வெளியேறியபோது ஈரோசும் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. அப்பொழுது ஈரோஸிற்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்திய இராணுவம் வெளியேறியபோது, ஈரோஸ் பிரமுகர்கள் கொழும்பில் தங்கியிருந்தனர்.

பாலகுமாரன் யாழ்ப்பாணம் வருவதென்ற முடிவை எடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் காட்டினார். அப்போதைய அரசியல் சூழலில் பாலகுமாரனிற்கு வேறு வழிகள் இருக்கவில்லை. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியான புலிகளின் ஆதரவு பத்திரிகையான ஈழநாட்டில் ஒரு கருத்துப்படம் வெளியாகியிருந்தது. மதில் மேல் பூனை மாதிரி, மதில் மேல் பாலகுமாரன் இருக்கும்படம். புலிகளிடம் வரப்போகிறாரா, அரசுடன் இருக்கப் போகிறாரா என்பதே அதன் கேள்வி.

ஈரோஸின் ஒரு பகுதினர் இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் முடிவை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் வீட்டுக்கு சென்றனர். தலைவர் பாலகுமாரன்- ஈரோஸ் என்ற அமைப்பையே கலைத்துவிட்டு, யாழ்ப்பாணத்திற்கு புலிகளிடம் வந்தார். அவருடன் சேர்ந்து ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் புலிகள் அமைப்பிற்கு வந்தார்கள். சிலர் போராளியாகவும் இருந்தார்கள். புலிகளின் நீதிநிர்வாகத்துறை பொறுப்பாளராக இருந்த பரா அவர்களில் ஒருவர். பலர் புலிகள் அமைப்பில் ஊதியம் பெறும் பணியாளர்களாக செயற்பட்டார்கள். வர்ணராமேஸ்வரன், சின்னபாலா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்ணராமேஸ்வரன் பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். சின்னபாலா பின்னர் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு சென்று, கொழும்பில் ஈ.பி.டி.பியின் ஊடகத்தில் பணியாளராக இருந்தார். பின்னர், இனம் தெரியாதவர்களால் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு புலிகளை குற்றம் சொல்பவர்களும் உள்ளனர். ஆனால், வலுவான குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி மேல்தான் உள்ளது.

பாலகுமாரனிற்கு புலிகள் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. தமது இயக்கத்தில் இணைந்த இன்னொரு இயக்க தலைவர் என்பதால் முக்கிய உறுப்பினர் என்று அழைத்து கௌரவம் வழங்கி, வீட்டில் உட்கார வைத்தனர். இது புலிகள் பாணி. கொள்கை முடிவு, தாக்குதல் விவகாரங்களில் பாலகுமாரனுடன் புலிகள் ஆலோசிப்பதில்லை. இது பாலகுமாரனிற்கு ஆரம்பத்தில் வருத்தத்தை கொடுத்தது. தனிப்பட்ட உரையாடல்களில் அதை பதிவு செய்தார். என்றாலும், புலிகள் முடிவை மாற்றத்தால் பாலகுமாரனிற்குள் இருந்த வருத்தமே வழக்கமாகிவிட்டது. எனினும், நெருக்கமானவர்களுடனான பேச்சில் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தவும் செய்வார்.

வன்னிக்கு புலிகள் சென்ற பின்னர் புதுக்குடியிருப்பில் பாலகுமாரனிற்கு வீடு வழங்கினார்கள். சமாதானத்தின் பின்னர், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மாடி வீடொன்றை அமைத்து கொடுத்தார்கள். பாலகுமாரனின் மனைவி மருத்துவ மாது. இரண்டு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள்.

இறுதியுத்தத்தின் ஆரம்ப சமயத்தில், புலிகள் கட்டாயமான ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார்கள். இதன் ஆரம்பகட்டத்தில் கட்டாயமான பிரச்சாரம் நடந்தது. வீதிகளில் செல்பவர்களை மறித்து, பிரச்சாரம் நடந்தது. கிட்டத்தட்ட கட்டாய ஆட்சேர்ப்பின் முதற்படி அது. உடையார்கட்டு பகுதியில் இந்த நடவடிக்கையின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தார்.

இந்த நடவடிக்கையில் பாலகுமாரன் விருப்பத்துடன் ஈடுபடவில்லையென பாலகுமாரனை தனிப்பட அறிந்தவர்கள் சிலர் இப்பொழுது சொல்கிறார்கள். ஆனால், அந்த சமாதானம் பாலகுமாரனை வரலாற்றின் பழியிலிருந்து விடுபட வைக்காது. இந்த அநீதியில் அவர் விரும்பாமல் ஈடுபட்டார் என்று சொல்ல முடியாது. காரணம், கட்டாய பிரசாரம், ஆட்சேர்ப்பில் ஈடுபட விரும்பாத சாதாரண போராளிகள் பலரே அதிலிருந்து விலகி யுத்தமுனைக்கு சென்றனர். புலிகளின் முக்கியஸ்தரான பாலகுமாரன் ஏன் சிறு அதிருப்தியையும் பகிரங்கமாக வைக்கவில்லை?

மாறான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத இயல்புதான் பாலகுமாரனின் பலவீனமாக இருந்தது. ஒரு தலைவராக அவரால் உருவாக முடியாமல் போனதற்கு காரணமும் இதுதான்.

இறுதியுத்தத்தில் 2009 ஜனவரி அளவில் அவர் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் காயமடைந்தார். உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் மிலேச்சனமான தாக்குதல் நடத்தியபோது, அதில் காயமடைந்தார். உடையார்கட்டு பாடசாலை வைத்தியசாலையாக இயங்கி வந்தது. அந்த வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியில் வந்தபோதே- வைத்தியசாலை வாசலில் காயமடைந்தார்.

காயமடைந்ததன் பின்னர் பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தொடர்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார். முன்னரும் அரசியல்துறை பொறுப்பாளர் மட்டத்திலான தொடர்பையும், நிகழ்ச்சிகளில் தளபதிகளை சந்திப்பவராகவும் மட்டுமே இருந்தார். பாலகுமாரன் மட்டுமல்ல, அரசியல்த்துறை உயர்மட்ட பொறுப்பாளர்கள் எல்லோருக்குமே இந்தகதிதான். அவர்களால் என்ன நடக்குமென்ற முடிவெடுக்க முடியவில்லை. புலிகளின் தலைமையின் முடிவை அறியவும் முடியவில்லை.

இப்பொழுது இலங்கை அரசியல் யாப்பு தொடர்பாக புத்தகம் எழுதி கூட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட புலிகளின் அரசியல் ஆய்வாளர்கள் வலைஞர்மடத்தில் அருகருகாக குடியிருந்தனர். பாலகுமாரன், பரா உள்ளிட்டவர்களும் அந்த பகுதியில் அருகருகாக குடியிருந்தனர். இந்த அணிகள் தமக்குள் கூடி யுத்தம் அப்படி முடியுமா, இப்படி முடியுமா என மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்ச்சி. தலைவரிடம் திட்டமுள்ளதா என்பதை அறிவதில் ஆர்வம் காட்டி, சாதாரண களத்திலிருந்து வரும் சாதாரண போராளிகளையும் பேட்டியெடுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்சூழலில் முறையான சிந்தனைக்குழாம் உருவாகததற்கு, முறையான அரசியல் ஆய்வாளர்கள், ஆய்வுமுறைமை உருவாகாததற்கு அந்த சமயங்கள் முழுமையான சாட்சி. புலிகளின் காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் சம்பவங்களிற்கு பொழிப்பு கூறுபவர்களே. இதே ஆய்வுமுறைதான் இன்றுவரை தொடர்வது தமிழர்களின் துரதிஸ்டமே.

யுத்தம் இறுகிக்கொண்டு வர, புலிகளின் தலைமை என்ன முடிவெடுக்கிறதென்பது தெரியாமல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார்.

அது எப்ரல் மாதம். பாலகுமாரன் ஒரு ஆபத்தான முடிவெடுத்தார்.

அது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்வது!

வலைஞர்மடத்திலிருந்து படகில் தப்பித்து சுண்டிக்குளத்தில் தரித்து நின்ற 55வது டிவிசன் படையினரிடம் சரணடைவதென பாலகுமாரன் முடிவெடுத்தார். இதற்காக இரகசிய திட்டம் தீட்டினார்.

இது 2009 மார்ச் மாதத்தில் ஆரம்பித்த திட்டம். அதாவது தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச்செல்லும் பொதுமக்களிற்கே மரணதண்டனை வழங்கவும் புலிகள் எத்தனித்த சமயம். தனது உதவியாளர்கள் மூலம் படகொன்றை தயார் செய்தார்.

படகோட்டிக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது. பாலகுமாரன், மனைவி, பிள்ளைகள், நம்பிக்கைக்குரிய ஒரு சிலரின் குடும்பங்கள்தான் படகில் செல்பவர்கள்.அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் பெருந்தொகையில் தப்பிச்செல்ல தொடங்கிவிட்டார்கள்.

ஒன்று தலைமார்க்கமாக. இன்னொன்று, கடல்மார்க்கமாக. கடல்மார்க்கமாக தப்பி சுண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த 55வது டிவிசனிடம் சரணடைபவர்களிற்கு உயிருத்தரவாதம் உள்ளதாக ஒரு அபிப்பிராயம் செய்திகளின் வழியாக உருவாக்கப்பட்டிருந்தது.

பாலகுமாரன் மகள் மகிழினியின் திருமணம்
பாலகுமாரன் மகள் மகிழினியின் திருமணம்

புலிகளின் முக்கியஸ்தர்களை குறிவைத்து அரசு உருவாக்கிய அபிப்பிராயமாகவும் இருக்கலாம். அந்த டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் இயல்பால் உருவானதாகவும் இருக்கலாம்.

ஏப்பரல் முதல்வாரத்தில் பாலகுமாரனின் தலைமையில் படகில் தப்பிச்சென்றார்கள். வலைஞர்மட கடற்கரையில் மறைந்திருந்து, மக்கள் தப்பிச்செல்லாமல் ஏற்படுத்தப்பட்டிருந்த புலிகளின் காவல்வேலிக்கு டிமிக்கி கொடுத்து படகில் ஏறினார் புலிகளின் முக்கியஸ்தர்.

படகு மெல்லமெல்ல வேகமெடுத்து கரையை கடக்க எத்தனிக்க, யாரோ தப்பிச்செல்வதை கடற்புலிகளின் படகொன்று அவதானித்துவிட்டது. துரிதகதியில் விரட்ட தொடங்கினார்கள். தப்பிச்செல்பவர்களை பிடிப்பதே அந்த அணியின் பணி. யாரோ பொதுமக்கள் தப்பிச்செல்கிறார்கள் என நினைத்த கடற்புலிகள் விரட்டிச் சென்று, அருகில் சென்று படகு மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். படகிலிருந்து அலறல் சத்தங்கள்.

கிட்ட சென்று வெளிச்சம் பாய்ச்சினால், பாலகுமாரன் தலையை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். அவரது இளவயது மகள் மகிழினியின் கையில் காயம். எலும்பு முறிந்திருந்தது. (அண்மையில் தமிழகம் திருச்சியில் மகிழினியின் திருமணம் நடந்திருந்தது) தம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படி பாலகுமாரனின் மனைவி போராளிகளை மன்றாட்டமாக கேட்டார். போராளிகளிற்கும் சங்கடமாகிவிட்டது.

அந்த படகை தடுத்து வைத்திருந்தபடி, கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டனர்.

(தொடரும்)
நன்றி : தமிழ் பக்கம் (மூலம்)