சி.வி.விக்னேஸ்வரன், விஜயகலாவிற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் தேரர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் வெளியிடும் கருத்துகளை நோக்கும் போது, சில கோரிக்கைகள் நியாயமானதாக தென்படுகின்றது என்று அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர், ஜீ.எல். பீரீஸ் நேற்றைய தினம் தேரரை சந்தித்து ஆசிப்பெற்றுக்கொண்டார். இதன் போது முன்னாள் அமைச்சரிடம் தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் ஒருமைத்தன்மை, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களில் உள்நாட்டில் இடம்பெற்ற கடும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், மக்களையும் மீள கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்நிலையில், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் வெளியிடும் கருத்துகளை நோக்கும் போது, சில கோரிக்கைகள் நியாயமானதாக தென்படுகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சி.வி. விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வடமாகாண அரசியல் வாதிகள் குறித்து தென்னிலங்கையில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.