பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சுழிபுரம் சிறுமியின் உறவினர்களிடம் நேற்று வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இந்த வழக்கு நேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. சிறுமியின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளும் மன்றுக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்களின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்தது.
சிறுமி கொலை
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித் துக் கொலை செய்யப்பட்டிருந்தார் 6 வயதுச் சிறுமி றெஜினா. சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றது. அந்தக் கொலைச் சம்பவம் தமிழர் தாயகத்தில் பெரும் சோகத்தையும், சட்டத்தின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் 6 பேர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சிறுமியின் கொலைக்கு நீதி கோரி மாணவர்கள், மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், வடக்குமாகாணம், கிழக்குமாகாணம், தெற்கு மாகாணம் என பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலைமையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மூவரும் மல்லாகம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வாக்குமூலம் பதிவு
இந்த வழக்கு நேற்று மல்லாகம் நீதிவான் ஏஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. றெஜினாவின் கொலை தொடர்பில் அவரது தாய், தந்தை, மாமனார் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. விசாரணை அறிக்கைகள் மன்றில் ஒப்படைக்கப்பட்டன. இறப்புத் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன. சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.