அலரி விதையை உண்ட குடும்பத் தலைவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
விசம் என்று தெரிந்தும் அதை உண்டால் என்ன நடக்கும் என்று விதண்டாவாதம் பேசிவிட்டு அவர் இவ்வாறு செய்துள்ளார்.
வலிகாமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டுச் சென்ற அவர் சிறிது நேரத்தில் நிதானம் அற்ற நிலையில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றவுடன் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.
இதை அவதானித்த மனைவி விசாரித்துள்ளார். தான் வரும் வழியில் இரண்டு அலரி விதைகளை உட்கொண்டதாகவும். இதனை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதிக்கவே உண்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட மனைவி உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும் சில மணிநேரத்திலேயே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இறப்புத் தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.