வவுனியாவில் கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல்! அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு

வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர்.

காணாமல்போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கொண்டு சென்று தடுத்து வைத்திருந்த நிலையில் இரு சிறுமிகளும் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர்.

அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அவ் வீட்டை இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த இரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து உணவுப்பொதி, தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் பாதணி என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றனர். அப்பொழுது ஆட்டோவில் வந்தவர்கள் குறித்த சிமிகளை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியதுடன், பலவந்தமாக அலரிவிதை உட்கொள்ள வைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை காணவில்லையென உறவினர்கள் தேடிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறியுள்ளனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, அலரி விதை உட்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதால், உடனடியாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக வைத்திய பரிசோதனைகளின் பின்னர் இன்று காலை அளவிலேயே மேலதிக விபரங்களை கூற முடியுமென்று வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.