இலங்கையின் ஐந்து ரூபா நாணயத்திற்கு வந்த சோதனை…..!! உடன் தடைசெய்யுமாறு கோரிக்கை….!

இந்தியாவின் தமிழ் நாட்டில் கீழக்கரை எனும் இடத்தில் இலங்கையின் ஐந்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது.இதனால் சில சந்தர்ப்பங்களில் குழப்பம் ஏற்படுவதாகவும், இதை தடை செய்ய வேண்டும் எனவும் கீழக்கரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கும் போது;

”வெளிநாட்டு நாணயம் நமது பகுதியில் பயன்படுத்தப்படுவது தவறான வழிமுறை. கடைக்காரர்கள் கொடுத்தால் பொதுமக்கள் வாங்க மறுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுக்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது;இலங்கையின் 5 ரூபாய் நாணயம் இந்திய மதிப்பில் 2.14 ரூபாய்க்கு சமமானது.

இந்த நாணயம் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில் இந்திய நாட்டின் ரூ.5 நாணயத்திற்கு இணையாக புழக்கத்தில் உள்ளது.குறித்த நகரில் ஒரு சில கடைக்காரர்கள் இதனை இந்திய நாணயம் போன்று, வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து பயன்படுத்துகின்றனர்.

இந்திய நாட்டின் 5 ரூபாய் நாணயம் போன்று இலங்கை ரூபாவும் காட்சியளிப்பதால் பொதுமக்களும் கவனிக்க தவறுகின்றனர்.இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இங்கு சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கை நாணயம் எளிதாக புழக்கத்திற்கு வந்து விட்டது எனக் குறிப்பிடப்படுகின்றது.