அவுஸ்திரேலியாவில் மூக்குத்தி அணிந்து சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த கதி

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்று இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என்று தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர், மூக்குத்தி அணியாமல் வந்தால் மாத்திரமே குறித்த மாணவிக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியில் சேர்க்கப்படும்போது சீருடை குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் கையெழுத்து வாங்கிய பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள், எனவே மாணவர்கள் அதனை பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்துள்ள பேட்டியில், எனது மகள் மூக்குத்தி அணிந்தது ஆடம்பரத்திற்காக இல்லை அது கலாசாரத்தின் அடையாளம், பள்ளியில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய அனுமதி வழங்கப்படுவது போன்று எனது மகளுக்கும் இந்த அனுமதி வழங்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு எங்களது கலாசாரத்திற்கும் மதிப்பளிக்கிறோம் என கூறியுள்ளார்.