கல்லீரல் கவனம்

உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன், தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது.
அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்க புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகிவிட்டது. 
“நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. நாம் உட்கொள்ளும் உணவானது செரிக்கப்பட்டு, ஊட்டச்சத்தாக இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தத்தில் கலந்த இந்த ஊட்டச்சத்துகள் கல்லீரலுக்கு கொண்டுசெல்லப்படும்.
பின்பு அவை சாதாரண குளுக்கோஸ், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இப்படி உடைக்கப்பட்ட சாதாரண குளுக்கோஸ், அமினோ அமிலம், கொழுப்பு போன்றவை உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான கொம்ப்ளக்ஸ் புரதம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும்.
இப்படி இவை மாற்றப்படுவதற்கு என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது ஒரு என்ஸைம் குறைந்தால்கூட ஊட்டச்சத்தை உடைக்கும் பணி தடைப்பட்டு, மெட்டோபொலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதை மெட்டோபொலிக் டிஸ்ஆர்டர் என்று கூறுவோம்.
உணவில் உள்ள சத்துகளை உடைத்து ஊட்டச்சத்துகளாக மாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஸைம்கள் நம் உடலில் இருக்கின்றன. ஒரு என்ஸைம் குறைந்தாலும் பிரச்சினைதான். அதனால் நூற்றுக்கணக்கான மெட்டோபொலிக் டிஸ்ஆர்டர் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் ஒரு சில நோய்கள் மட்டும் மிக அரிதாக இருக்கும். உதாரணமாக புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை உற்பத்தி செய்யும்.
அமோனியா என்பது மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அது மூளையைப் பாதிக்கக்கூடியது. எனவே, கல்லீரல் அந்த அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. அமோனியாவை யூரியாவாக மாற்றுவதை யூரியா சைக்கிள் என்று கூறுவோம். ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நடைபெறும். இதற்கு ஐந்து என்ஸைம்கள் தேவைப்படுகின்றன.
இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் என்ஸைம் இல்லாமல் போய்விட்டால், இந்தப் பணி தடைப்பட்டு அமோனியா உடலில் தங்கிவிடும். இது மூளையைத் தாக்கி கடைசியில் உயிரிழப்பில் கொண்டுபோய்விடும்.
அதிக அளவில் பரம்பரை ரீதியாக குழந்தைக்கு இந்த நோய் கடத்தப்படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாடு தெரியாது. அவர்கள் குறிப்பிட்ட ஏதாவது ஓர் உணவை உட்கொள்ளும்போதுதான், பிரச்சினை இருப்பது தெரியவரும்.
உதாரணத்துக்கு ஹெரிடிட்டி ஃப்ராக்டோஸ் இன்டோலரன்ஸ் என்ற ஒரு நோய் உள்ளது. சில குறிப்பிட்ட பழங்களை உண்ணும்போது அதில் உள்ள இனிப்பை ஜீரணிக்க முடியாமல் போய்விடும். அதனால், வயிற்றுப்போக்கு அல்லது கல்லீரல் செயலிழப்பில் கொண்டு போய்விடும்.
குழந்தைக்கு காய்கறி அல்லது பழங்களைப் புகட்ட ஆரம்பிக்கும்போதுதான் இந்தப் பிரச்சினையே பெற்றோருக்குத் தெரியவரும். கல்லீரலை மாற்றினால்தான் இவர்களால் உயிர்வாழ முடியும். சிலருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் கிருமித்தொற்று காரணமாகவும் கல்லீரல் பிரச்சினை வரலாம்.
சிறுநீரகப் பிரச்சினைக்கு டயாலிஸிஸ் செய்யப்படுவதுபோல, இவர்களின் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட நஞ்சை அகற்றும் டயாலிஸிஸ் முறை வந்தது. ஆனால், அந்த சிகிச்சையால் எல்லாவிதமான நஞ்சையும் அகற்ற முடியவில்லை.மேலும், இதற்கான சிகிச்சைக் கட்டணமும் மிக அதிகம்.
இந்த நிலையில்தான் ஆக்ஸிலரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வந்துள்ளது. இதில், தானமாகப் பெறப்படும் கல்லீரலை, ஏற்கனவே உள்ள கல்லீரலுடன் சேர்த்துப் பொருத்துவோம். இதனால் நோயாளியின் கல்லீரல் குறிப்பிட்ட பிரச்சினையை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். கூடுதலாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், அந்தக் குறிப்பிட்ட பிரச்சினையை மட்டும் கையாளும். இதனால் நோயாளி தன் வாழ்நாள் இறுதி வரை இது தொடர்பான எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ முடியும். 
இந்த சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. தானமாகப் பெறப்படும் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட திசுவை மட்டும் தனியே பிரித்தெடுத்து, பதப்படுத்திப் பாதுகாத்து வைக்கப்படும்.
தேவைப்படும்போது, கல்லீரலுக்குச் செல்லும் இரத்தத்தில் அந்த கல்லீரலில் திசுவைச் செலுத்துவோம். அது நோயாளியின் கல்லீரலில் சென்று சேர்ந்து, செயல்பட ஆரம்பிக்கும்.