சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா?

சனி பெயர்ச்சி என்பது நமக்கான கஷ்ட காலமாக கருதுவது தவறு. அவர் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சரி செய்யவும், நம்மை வழிபடுத்தவும் வருகின்றார்.

கடந்த ஐந்து வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து இருப்பீர்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருந்திருக்கும். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கும் இரண்டாம் வீடான மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

தனுசு ராசிக்கு பாதச்சனி நடக்கப்போகும் காலமிது. பேசும் வார்த்தையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. கடந்த வருடங்களில் இருந்த கஷ்டமானது இந்த சனிப் பெயர்ச்சி மூலம் சற்று தனியும். அதிகப்படியான பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்களின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

வருமானத்தில் தடை ஏற்படும். சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்போது நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டிய காலமிது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மௌனத்தையே பதிலாக கொடுங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டாம். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் மூலம் சந்தோஷமான சூழ்நிலை நிலவும்.

பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக காலில் அடி படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு இதுநாள்வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் வேலை கிடைக்கும்.

ஆனால் என்ன வேலை கிடைக்கின்றதோ அதை உங்கள் மனதார ஏற்றுக் கொள்வது நல்லது. சம்பளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் வேலைக்கு செய்தால் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏழரைச் சனியில் வேலை கிடைப்பது மிக கஷ்டம்.

மனதிற்குப் பிடித்த வேலை தான் கிடைக்க வேண்டுமென்று, கிடைத்த வேலைக்கு செல்லாமல் இருந்து விடாதீர்கள். வேலையே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு வேலைக்கு செல்வது நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

நீங்கள் செய்த வேலைக்கு ஊதியம் குறைவாகத்தான் கிடைக்கும். நிறைய சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருந்தாலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய காலம் இது.

வேலைப்பளு அதிகமாக உள்ளது என்று வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்கு வரவே கூடாது. உங்களது கடமையை தொடர்ந்து செய்துவாருங்கள் பலன் தானாகவே கிடைக்கும்.

மாணவர்கள்
உங்கள் ராசியில் இருக்கும் குருவின் பார்வை ஐந்தாமிடத்தில் விழுகிறது. படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் உடன் படிக்கும் மாணவர்களிடம் அனாவசியமாக எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. பெற்றோர்கள் சொல்லையும், ஆசிரியர்களின் சொல்லையும் கேட்டு நடப்பது மாணவர்களுக்கு நன்மை தரும். விதண்டாவாதம் வேண்டாம்.

திருமணம்
இந்த சமயத்தில் திருமண பேச்சுவார்த்தையை சற்று தள்ளிப்போடுவது நன்மை தரும். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் பல வகையான தடங்கல்களை கடந்து செல்லவேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே விரிசல் உண்டாக வாய்ப்பு உள்ளது. பிரச்சனை என்று வரும் போது விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
சனிபகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் லாபம் குறைவாகத்தான் வரும். உங்கள் தொழிலில் யாரை நம்பியும் கடனாக பணத்தையோ, பொருளையோ கொடுக்கவேண்டாம். நிச்சயம் நீங்கள் கடனாக கொடுக்கும் அந்த பொருளானது உங்களுக்கு திரும்ப வராது.

வியாபாரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பேன்’ என்று வருபவர்களை முழுமையாக நம்பி விடாதீர்கள். புதிய முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்
சனிக்கிழமை தோறும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு காலையில் வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் ஏழை பெண் குழந்தைகளுக்கு படிப்பதற்கான சிறு சிறு உதவிகளை செய்து வரலாம்.