உண்மையிலேயே சனிப்பெயர்ச்சி எப்பொழுது?.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி

திருக்கணித பஞ்சாங்கம் படி இன்று (24.1.2020) சனிப்பெயர்ச்சி எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி வருகிற 27.12.2020ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்றும், வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதம் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாக்கள் அனைத்தும் அசல் சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சனிப்பெயர்ச்சி (19.12.2017) மார்கழி மாதம் 4ம் நாள் செவ்வாய் காலை 10.01 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வாண்டு சனிப்பெயர்ச்சி விழா வரும் சுபமங்கள சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்கு நிகழவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்பது தற்போது உறுதியான தகவலாக வெளியாகியுள்ளது.