குரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு? ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதன் விளைவாக, சர்ப்ப கிரகங்கள் ஆகிய ராகு,கேதுக்கள் சுப ஒளியிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக செயல்படும் ஒரு ஆற்றலை பெறுகின்றது.

இந்த அதிசார குரு பெயர்ச்சியால் துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

துலாம்
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் குரு சற்று பலவீனம் பெற்று சனிபகவான் சுபத்துவம் அடைகிறார். இதன் மூலம் உங்களுக்கு வீட்டில் சற்று நிம்மதி கிடைக்கும் எதிரிகள் தொல்லைகள் இருந்து விடுபடுவீர்கள்.

வேலை பளுவில் இருந்து சற்று ஓய்வு கிடைத்து,நிம்மதி பெறுவீர்கள் மேலும் சனிபகவான் சுபத்துவம் ஆகி பத்தாம் பார்வையாக, உங்களுடைய லக்னத்தை பார்வை இடுவதால்,உங்களுக்கு முன்பு இருந்த சோம்பல் நிலை நீங்கி சற்று சுறுசுறுப்பு அடைவீர்கள்.

விருச்சிகம்
உங்களுடைய முயற்சி வீரிய ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெற்று இருப்பதால் உங்களுடைய முயற்சிகள் கை கொடுக்கும் காலமிது. தாமதமான புத்திர பாக்கியங்கள் தம்பதிகளுக்கு கிடைக்கப்பெறும். மேலும் தந்தையாரின் உடல் நலத்தை கவனம் செலுத்துவீர்கள்.

அவர்கள் உடல் நலமும் நன்றாக தேரும் காலமிது. மேலும் உங்களுக்கு இருந்த அந்த தூக்கமின்மை பிரச்சனைகள் தற்போது சரியாகும்.

தனுசு
உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில், வாக்கு ஸ்தானத்தில் குரு பலவீனமாகி, சனி சுபத்துவம் பெறுவதால் இதுவரை இருந்த வாக்குவாத பிரச்சனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் சற்று குறையும்.

உங்களுடைய உடல் நலமும், உங்களுடைய தாயின் உடல்நலமும் முன்னேற்றம் அடையும். இதுவரை ஏதும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பிரச்சினைகள் விலகும் மேலும் விபரீத ராஜயோகம் ஏற்படும் காலம் இது.

மகரம்
உங்களுடைய ராசியிலேயே குரு பகவான் பலவீனமாகி சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் உங்களுடைய முயற்சி சற்று அதிகமாக இருக்கும்.

இந்த காலகட்டங்களில், இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட சில சலசலப்பு விஷயங்கள் சற்று குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். மேலும் தொழில் சார்ந்த பிரச்சனைகளும், அதில் இருந்த மந்த நிலையும் தற்போது குறைந்து, அதில் மறுமலர்ச்சி காணப்படும்..

கும்பம்
உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில், குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் இதுவரை உங்களுக்கு இருந்த அலைச்சல், மனக்கஷ்டங்கள்,தொடர் மற்றும் தொலைதூரப் பயணங்கள் குறைந்து, அவை சுப விரயங்களாகவும், ஒரு பயனுள்ள பிரயாணங்கள் ஆகவும் மாறும் காலம் இது.

கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் சார்ந்த விஷயங்களில் சற்று நெருக்கம் ஏற்படும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் சற்று விலகும்.ஆக இவர்களாகவே ஆன்மிக பயணங்கள் மேற்கொண்டு அதை சுப விரயமாக மாற்றினால் இவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

மீனம்
உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் நிறைந்த லாபங்கள் உண்டு. சனிபகவான், உங்களுடைய ராசியை பார்ப்பதால் அதற்கு முன்பு இருந்த அந்த மந்த நிலை குறைந்து, இப்போது சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மேலும் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால், உங்களுக்கு நிறைந்த அதிர்ஷ்டமும் உண்டு அதுமட்டுமின்றி உங்களுக்கு உடல்நல குறைபாடுகள் சற்று குறைந்து காணப்படும் காலம் இது.

சனி சற்று சுபராகி உங்களுடைய புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அதற்கு முயற்சிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கும்.