சனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்!

வீட்டில் மட்டும் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய காரணம் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. செல்வ சுகத்தை அனுபவிப்பவனை சுக்கிரதிசை அடிச்சிருக்குப்பா என்று பேசுவார்கள்.

சுக்கிரன்தான் வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி. இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு.

லட்சுமி யோகம் இருப்பவர்களுக்கும் மகாலட்சுமி யோகம் கொண்ட பெண் மனைவியாக அமையப்பெற்றவர்களுக்கும் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கும். வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும்.

செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.

மகாலட்சுமி போன்ற மனைவி எல்லோருக்கும் வாய்த்து விடாது அதற்கும் யோகம் வேண்டும். மகாலட்சுமி யோகம் கொண்டவர்களுக்கு செல்வ வளம் குவியும். திருப்பதி ஏழுமலையானுக்கே மகாலட்சுமி மனைவியாக வந்த பின்னர்தான் செல்வம் பெருகியதாக சொல்வார்கள். யாருக்கெல்லாம் லட்சுமி யோகம் இருக்கிறது. மகாலட்சுமி யோகம் கொண்ட பெண் மனைவியாக யாருக்கெல்லாம் கிடைப்பார் என்று பார்க்கலாம்.

சுக்கிர திசையில் யோகம்
பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு.

ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான். சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள்.

வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்கிறார். சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசையில் உள்ளவர்களையும் குபேரனாக்கும் சக்தி படைத்தது.

லட்சுமியின் அருள்
லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள்.

இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார். பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள்.

இல்லாமை என்ற சொல்லலை இல்லாமல் செய்பவள். ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலட்சுமியே.

மகாராணி போல வாழ்வு
ஒரு பெண்ணுக்கு மகாலட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் வாழ்வில் யாரிடமும் கையேந்த மாட்டார்கள். நல்ல கணவர் கிடைப்பார் மகாராணி போல் வாழ்வு அமையும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது மகாலட்சுமி யோகத்தை தரும்.

புகழ் செல்வம் கிடைக்கும்
ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும். இந்த யோகம் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்டது.

இந்த யோகத்தை ஜனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும். அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான்.

பணவரவு வரும்
லக்னம், நான்கு, எட்டில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை படைப்பார்கள். சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சவுந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் பண வரவு கிடைக்கும்.

ராஜயோக அமைப்பு
3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி.

12ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும். ஒருவரின் ஜாதகத்தில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர்.

3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழும் அமைப்பு கிடைக்கும்.

பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும்.