கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த பிரச்னையெல்லாம் வரும்!

கால் மேல் கால் போட்டு அமர்வது என்பதே தனி கம்பீரம்தான். நம் மீதான தன்னம்பிக்கை அதிகமாக இருந்தால்தான் இப்படி அமரத் தோன்றும்.

இது மற்றவர்கள் கவனத்தை நம் மீது கவனம் ஈர்க்கவும் செய்யும். குறிப்பாக பெண்கள் இப்படி அமரும் போது நிமிர்ந்து பார்க்காத தலைகளே இருக்காது.

இது நல்ல தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தினாலும் உடலளவில் இதனால் ஆபத்துகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவை என்ன என பார்க்கலாம்:-

முதுகு வலி உண்டாகும்

கால் மேல் கால் போட்டு அமர்வது அந்த நேரத்திற்கு சௌகரியமாக இருந்தாலும் உடலுக்கு இது அசௌகரியமான விஷயம். எனவே இப்படி அமரும்போது இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு முதுகு வலி உண்டாகும்.

சீரற்ற உடலமைப்பு

இப்படி அமரும்போது நாம் நேராக அமராமல் உடலை வளைத்து சீரற்ற அமைப்பில் அமர்ந்திருப்போம். இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு உடலமைப்பே மாறிவிடும்.

இரத்தம் உறைதல்

ஒரு கால் மேல் மற்றொரு காலை போடும்போது காலில் சில நரம்புகள் தடுக்கப்பட்டு இரத்த ஓட்டம் மெதுவாக நடக்கிறது. இதனால் ஆங்காங்கே இரத்தம் உறைந்துபோகக் கூடும் வாய்ப்பு அதிகம்.

இரத்த அழுத்தம்

ஒரு காலை கீழே ஊன்றி மற்றொரு காலை மேலே வைப்பதால் கீழே ஊன்றும் ஒரு கால் வழியாக மட்டுமே இரத்தம் அழுத்தப்பட்டு ஒரு பக்கமாக பாய்கிறது. ஆனால் ஒரு காலுக்கு அழுத்தம் இல்லாததால் இரத்த அழுத்தம் ஏற்படும்.உங்களுக்கு ஏற்கெனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இந்த செயலால் மிகவும் மோசமடையக் கூடும்.

கர்ப்பிணிகளுக்கு ஆபத்து :

இவ்வாறு அமர்வது குழந்தைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் நீங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள். தசை பிடிப்பு, முதுகு வலி, கணுக்கால் வலி போன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

முட்டி வலி

தொடர்ந்து அல்லது அடிக்கடி இப்படி அமரும் பழக்கம் இருந்தால் முட்டி வலி ஏற்படும். ஏற்கெனவே முட்டிவலியால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த வலியை இன்னும் மோசமடையச் செய்யும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.