பூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார்.

ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

இதனடிப்படையில் இன்று தனுசு ராசியினருக்கு ராகு – கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.

பலன்கள்
இந்த பெயர்ச்சியின் மூலம் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.

பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரி செய்வீர்கள். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும்.

தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர்.

வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது.

தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும்.

சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர்.

தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு.

வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறுdம். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும்.

சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம்.

மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.

மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். “உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.

பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6, 9

மலர் பரிகாரம்: சாமந்தி மற்றும் மல்லிகை மலரால் சிவனுக்கு நாமம் சொல்லி தினமும் வணங்கி வாருங்கள்.