நாளை மகாளய அமாவாசை: புண்ணியம் நிறைந்த அத்தினத்தில் இதை செய்திடுங்கள்

நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை, மகாளய அமாவாசை.

மாதந்தோறும் அமாவாசை வரும். அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள்.

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அதில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சக்தி வாய்ந்தவை. சந்ததி சிறக்கச் செய்யும் நாட்களாக அமைந்திருப்பவை.

தை அமாவாசை. அடுத்து ஆடி அமாவாசை. மூன்றாவதாக… புரட்டாசி அமாவாசை.

இந்த மூன்று அமாவாசைகளில், நாம் செய்யும் பித்ரு வழிபாடானது நம்மை சீரும் சிறப்புமாக வாழவைக்கும். முன்னோர்களின் பரிபூரண ஆசியை நமக்கு வழங்கும்.

என்ன செய்ய வேண்டும்?
முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி, மூன்று முறை எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விடவேண்டும். முன்னோரின் படங்களுக்குப் பூக்களிட வேண்டும். அவர்களுக்கு படையலிடவேண்டும்.

நம் முன்னோர்களுக்கு வைத்த படையலை காகத்துக்கு வழங்கி வேண்டிக்கொள்ளவேண்டும்.நம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் நினைவாக, யாருக்கேனும் புடவை வாங்கிக் கொடுக்கலாம். வேஷ்டி வழங்கலாம். குடை வழங்கலாம். போர்வை வழங்கலாம். சால்வை வழங்கலாம். காலணி வாங்கிக் கொடுக்கலாம்.

ஐந்து பேருக்கேனும் உனவுப் பொட்டலம் வழங்கலாம். இவை எல்லாமே பித்ரு சாபத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். பித்ரு தோஷம் முழுவதுமாக நம்மிலிருந்து விலகிவிடும். பித்ருக்களின் பரிபூரணமாக ஆசியைப் பெறலாம்.

இதனால் இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் விலகும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழையடி வாழையென வம்சம் தழைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.