அதிகம் கோபம் படுபவர்களா நீங்கள்?.. தடுக்க எழிய இந்த வழிமுறைகள் பின்பற்றுங்கள்..

அன்றாடம் நாம் எல்லோரும் கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா? என்றால் கேள்விக்குறி தான்.

கோபம் அதிகம் ஏற்பட்டால், அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். அதை காணும் போது கோபம் குறைய வாய்ப்பு ஏற்படும்.

கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள்.

இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு… பொறுமையுடன் இரு… சாந்தமாக இரு எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.

அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம்.

ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மனம் ஒத்துழைத்தால், ஒரு பூச்செடியைக்கூட வாங்கிப் பராமரிக்கலாம்.

மேலும், ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார்.

அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம்.

அதேப்போல் ஒருவனுக்கு மறதியும் கூட கோபத்தை குறைக்க பயன்படும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.

அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன.

அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால் , கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.