சிவனுக்கு உரிய மங்கலங்கள் நிறைந்த பங்குனி மாதத்தில் நாம் செய்யும் சின்ன சின்ன தானங்கள் கூட அதீத பலன்களை தரும் என்பது ஐதீகம்.
அதாவது, ஆயிரம் பசுக்களை தானம் செய்ய புண்ணியம் கிடைக்குமாம், எனவே இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகள் செய்து வந்தால் தடைகளெல்லாம் நீங்கும்.
இம்மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் மிகவும் விசேஷமானது, இந்நாளில் தான் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசிப்பார்கள், காவடியும் எடுப்பார்கள்.
அப்படி செய்தால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.
இதேபோன்று பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.
பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும்.
அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.