சனி பகவானால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து விடுபடுவதற்கு சனி பிரதோஷத்தை முறையாக வழிபட்டால் நல்ல பலன்களை அடையலாம். சகல, பாவங்களையும் போக்கும் இந்த சனி பிரதோஷத்தில் சிவனை எப்படி வழிபடுவது? என்பதைத் பற்றி தெரிந்துகொள்வோம்.
கர்ம வினைகளுக்கு பலனாக சனி பகவான் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி என்று விதவிதமாக நமக்கு தொல்லைகளை கொடுத்து வருவார். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி.
ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷம் எனப்படும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது.
இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அதுவும், தை மாதத்தில் வரக்கூடிய இந்த சனி பிரதோஷம் ரொம்பவே சக்தி வாய்ந்தது.
அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சிவனை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.
நாள் முழுவதும் சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் நமச்சிவாய’ என்கிற மந்திரத்தை நீங்கள் வேலை செய்யும் பொழுது உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். பிரதோஷத்தில் சிவாலயம் சென்றதும் முதலில் நந்தி பகவானை தரிசனம் செய்ய வேண்டும்.
பின்னர் இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நந்தி பகவானை நோக்கி அதே வழியில் வந்து தரிசனம் செய்ய வேண்டும். பின் அங்கிருந்து வலது புறமாக சென்று சக்தியின் ஸ்வரூபமாக விளங்கும் கோமுகி என்னும் தீர்த்தத்தை அடைந்து அங்கு வரும் அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் மீண்டும் நந்தி பகவானை வந்தடைய வேண்டும்.
கடைசியாக மீண்டும் இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை தரிசித்து வந்த வழியே நந்தி பகவானை அடைந்த பின்னர் தான் சிவபெருமான தரிசிக்க வேண்டும்.
பிரதோஷ பூஜையில் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து சிவாலயத்தில் அமர்ந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இதன்படி பதினொரு பிரதோஷங்கள் செய்வதன் மூலம் சகல விதமான பிரச்சனைகளும், நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.