அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன் மகர ராசியில் இருந்து இனி கும்ப ராசியில் தேவ குரு உடன் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார்.
மார்ச் 31ம் தேதி காலை 8.54 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சுக்கிரன் ஏப்ரல் 27ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
இந்த சுக்கிர பெயர்ச்சியாலும் குரு சுக்கிரன் கூட்டணியாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்
அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திடீர் பண வரவு அதிகரிக்கும். வெள்ளி, செவ்வாயில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வர நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். அம்மன் கோவில்களில் சந்தனம் தானம் செய்யலாம்.
மிதுனம்
பணத்தட்டுப்பாடு நீங்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். சிவனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனம் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.
கடகம்
பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை வெள்ளிப்பொருட்கள் வாங்கி அம்மாவிற்கு பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.
சிம்மம்
களத்திரகாரகன் பார்வை உங்கள் மீது படுவதால் எதிர்பாலினத்தவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.
கன்னி
பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குதூகலப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையையும் அம்மனையும் வணங்கவும்.
துலாம்
சுப காரியங்கள் நடைபெறும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நெருக்கம் கூடும். நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் மறையும்.
தனுசு
உடல் நலனில் சின்னச் சின்ன பிரச்சினை ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது
தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தர பாதிப்புகள் குறையும்.
மகரம்
தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.
மீனம்
பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். சுப விரைய செலவு ஏற்படும்.
வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கிக் கொடுங்கள்.