நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா! (Video)

சைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா இன்று (31.01.2018 ) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலித்திருந்தார்.நல்லூரான் பக்தர்கள் ஆலய வளாகத்தில் முழுவதும் நிறைந்துகாணப்பட்டனர்.இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. நவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும் சிறப்பு மிக்க தினம் இது . சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இது வழிவழியாக இந்துக்கள் கையாண்டு கொண்டு வரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

 படங்கள்: ஐ.சிவசாந்தன்